அதிமுக மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து பலர் வெளியேறி தவெகவில் இணைந்து வருகின்றனர். அவ்வாறு அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி இன்று அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் தவெகவில் இணைந்தார்.
தனது ஆதரவாளர்கள் 15,000 பேருடன் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
”ஒரு தலைவன் சரியான முடிவெடுக்காமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்தான் இன்றைய அதிமுக. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்கிறார்கள். தொண்டர்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படவில்லை. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை துரோகிகள் என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவுகளால் அதிமுக தள்ளாடுகிறது. மாபெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் முதல்-அமைச்சர் விஜய். விஜய் உருவாக்கியது ஒரு தலைமுறை மாற்றம். தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சிதான் தொடரும்.
நமது முதல்-அமைச்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் கரூர் வர இருக்கிறார். அந்த கரூர் நிகழ்ச்சியில் இன்னும் அலைகடலாக பல தொண்டர்களை அதில் இணைத்து, இந்த இயக்கம் தொடர்ந்து வெற்றி பெற உழைப்போம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சி.விஜயபாஸ்கர், ”தேர்தலுக்கு முன் தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தினோம். தேர்தலுக்குப் பின் ஆதரவு தர வலியுறுத்தினோம். ஆனால் தலைமை கேட்கவில்லை. எல்லா தேர்தல்களிலும் இனி தவெக வெற்றி பெறும். உறுதியான ஒற்றை தலைமையில் பயணித்து வெற்றி வாகை சூடுவோம், பயணிப்போம், உழைப்போம்.
இங்கு பார்ப்பது வெறும் டிரெய்லர் தான். தலைமையின் ஆதரவோடு மெயின் பிக்சரை டெல்டா மாவட்டத்தில் காட்டுவோம். அங்கே மீண்டும் ஒரு பிரம்மாண்ட இணைப்பு விழா நடத்த தயாராக உள்ளோம்” என்று கூறினார்.
