காவிரி நதி நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்துள்ளனர்.

காவிரி தமிழகத்தின் உயிர்நாடி என்றும், அதில் அரசியல் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியதை நினைவுபடுத்திய அவர், தமிழகத்தின் உரிமைகளை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதியளித்தார்.

பிரச்சினையை நேர்மறையாகத் தீர்க்கும் நோக்கில் பெங்களூருக்குச் செல்லத் திட்டமிட்டதாகவும், தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறுவை சாகுபடிக்கான நிவாரணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய விஜய், “முன்னும் பின்னும் பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருக்கும்” என எதிர்க்கட்சியை விமர்சித்தார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி கொடுத்தார். “பேப்பர் படிச்சா மட்டும் போதாது. எது நிவாரணம், எது சிறப்புத் தொகுப்பு என்பதைத் தெரிந்திருக்கணும்” என அவர் கூறினார். ரூ.164 கோடி சிறப்புத் தொகுப்பு எல்லா அரசுகளும் வழங்குவதுதான். அதைத் தவெக அரசும் வழங்கியுள்ளது. ஆனால் தற்போது விவசாயிகள் வறட்சி நிவாரணம் கோருகின்றனர். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கர்நாடக முதல்வர் மேகதாது அணைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திய நிலையில், தமிழகம் எப்போது அத்தகைய கூட்டத்தைக் கூட்டப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார். விவசாயிகளைச் சந்தித்து, அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், அரசுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த என்ன பயம் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி பிரச்சினை உணர்வு ரீதியானது என்பதால் அரசியலுக்கு அப்பால் அணுகப்பட வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டாலும், நிவாரணம் மற்றும் அனைத்துக் கட்சி ஆலோசனை குறித்த விவாதம் தொடர்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version