தஞ்சாவூரில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை திட்டம் தொடர்பாக ஆளும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார். கர்நாடக அரசு தண்ணீர் திறக்காதது, மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, மத்திய அரசின் அணுகுமுறை ஆகியவற்றைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசு காவிரி பிரச்சினையில் செயலழிந்துவிட்டதாகவும், அமைச்சர்கள் அனைவரும் ஜோக்கர்களாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். “லாட்டரி விற்ற அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என பலரும் உள்ளனர். காவிரியில் தண்ணீர் வராதபோது மவுனமாக இருக்கிறார்கள். நீர்வளத்துறை அமைச்சர் கூட செய்தியாளர்களைக் கண்டால் திருடன் போல ஓடுகிறார்” என்றார்.
ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும், பிரச்சினைகளைத் திசைதிருப்புவதில் அரசு ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் பேசாமல், மெட்ரோ ரயில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போடுவதாகவும், அதுவும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே ஆய்வு செய்வதாகவும் விமர்சித்தார். “ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யக்கூடாது” என்று அவரது பாணியில் சொன்னால் புரியும் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் பலவீனமான அரசு அமைந்திருப்பதால்தான் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதாக உதயநிதி கூறினார். கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை என அறிவித்தபோதும் பதில் சொல்லாமல் மவுனம் காப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியிலுள்ள கர்நாடக அரசையோ பாஜக ஆட்சியிலுள்ள மகாராஷ்டிர அரசையோ எதிர்த்துப் பேச முடியாத நிலை எனவும் விமர்சித்தார். முதலமைச்சர் பதவியேற்ற பிறகும் ‘பாஜக’ என்ற சொல்லை உச்சரிக்காத அளவுக்கு பயம் உள்ளதாகச் சாடினார்.
தேர்தலுக்கு முன் “அடுத்த ஜென்மம் வந்தால் விவசாயியாகப் பிறக்க வேண்டும்” என்று சொன்ன விஜய், இப்போதே விவசாயிகளுக்காகச் செயல்படலாமே எனக் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் திமுக கேள்வி எழுப்பும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்காமல் அரசு இருப்பதாகவும், டெல்லிக்குச் செல்லும் விவசாயிகள் மகாராஷ்டிராவில் இறக்கிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக உரிமையை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளையும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் வலியுறுத்தி உதயநிதி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
