“வெப்ப அலை என்பது இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டல நாடுகளின் பிரச்சினை” என்ற பொதுவான கருத்தை, கடந்த சில வாரங்களில் பிரிட்டனில் ஏற்பட்ட அதீத வெப்பம் முற்றிலும் தகர்த்தெறிந்துள்ளது.
உலகின் மிகவும் குளிர்ச்சியான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் பிரிட்டனில், ஜூன் மாதத்திலேயே வெப்பநிலை 36 முதல் 40 டிகிரி செல்சியஸை எட்டியது. இதனால் போக்குவரத்து, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் என அடிப்படை கட்டமைப்புகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதில் குறிப்பிடத்தக்க சம்பவம் என்னவென்றால், லண்டனில் “Climate Resilience” (காலநிலை தாங்குதிறன்) குறித்து நடைபெற இருந்த ஒரு மாநாடே, அதீத வெப்பம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையே காலநிலை மாற்றம் தடுத்தது என்பது உலக நாடுகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் கட்டமைப்புகள் ஏன் தோல்வியடைந்தன?
பிரிட்டனின் பெரும்பாலான வீடுகள் குளிர்காலத்தை மனதில் வைத்து கட்டப்பட்டவை. வெப்பத்தை வெளியேற்றும் வசதிகள் மிகவும் குறைவு. இந்தியா, வளைகுடா நாடுகள் போன்ற இடங்களில் காணப்படும் ஏர் கண்டிஷனர் பயன்பாடும் அங்கு மிகக் குறைவு. இதன் விளைவாக வீடுகளுக்குள் வெப்பநிலை வெளிப்புறத்தை விட அதிகமாக உயர்ந்தது.
சாலைகள் உருகின. ரயில் தண்டவாளங்கள் வளைந்தன. சில பள்ளிகள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வயதானவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகள் அதிக ஆபத்தை சந்தித்தனர்.
இது ஒரு தனி நிகழ்வா?
இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஐரோப்பா தொடர்ந்து வெப்ப அலைகளை எதிர்கொண்டு வருகிறது. 2022-ல் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக 40 டிகிரியை தாண்டியது. 2023 மற்றும் 2024-ல் தெற்கு ஐரோப்பாவில் காட்டுத்தீ, வறட்சி, நீர் பற்றாக்குறை அதிகரித்தது. 2025-ல் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 2026-லும் அதே நிலை தொடர்கிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐ.நா. காலநிலை மாற்ற அமைப்பு (IPCC) ஆகியவை, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமைக் குடில் வாயு உமிழ்வே இந்த தீவிர வெப்ப நிகழ்வுகளுக்கான முக்கிய காரணம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
தகவமைத்தல் ஏன் முக்கியம்?
கார்பன் உமிழ்வைக் குறைப்பது (Mitigation) மட்டுமல்ல, காலநிலை மாற்றத்துடன் வாழும் திறனை உருவாக்குவதும் (Adaptation) அவசியம் என்பதே இப்போது உலகின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அதாவது,வெப்பத்தைத் தாங்கும் நகர வடிவமைப்பு, அதிக மரக்கன்றுகள் நடுதல், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் வெப்பத்தைத் தாங்கக்கூடிய கட்டிட வடிவமைப்பு போன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
பணக்கார நாடுகளும் தயாராக இல்லை
காலநிலை மாற்றம் குறித்து உலகிற்கு பாடம் எடுத்த பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளே இன்று அதற்குத் தயாராக இல்லை என்பது இந்த வெப்ப அலை மூலம் வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) சமீபத்திய Adaptation Gap Report-இன்படி, உலக நாடுகளுக்கு காலநிலை தழுவல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி மற்றும் முதலீட்டில் இன்னும் மிகப்பெரிய பற்றாக்குறை நீடிக்கிறது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் நிலையில், அதில் ஒரு பகுதியே தற்போது கிடைக்கிறது.
இந்தியாவுக்கு கிடைக்கும் பாடம் என்ன?
இந்தியாவில் ஏற்கனவே பல மாநிலங்கள் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான தாரகத் திட்டத்தை (Heat Action Plan) நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக அகமதாபாத், டெல்லி, ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நகரமயமாக்கல், கான்கிரீட் கட்டிடங்கள், மரங்கள் குறைதல், ஏரிகள் மறைதல் போன்றவை இந்திய நகரங்களிலும் வெப்பத்தை அதிகரித்து வருகின்றன.

காலநிலை மாற்றம் இனி எதிர்கால அச்சுறுத்தல் அல்ல; நிகழ்கால நிதர்சனம். வெப்ப அலை, வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ போன்றவை உலகின் எந்த நாட்டையும் விட்டுவைக்கவில்லை. பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிட்டன் கூட இந்த வெப்பத்தை சமாளிக்க முடியாமல் திணறியிருப்பது, “காலநிலை மாற்றத்திலிருந்து எந்த நாடும் விதிவிலக்கு அல்ல” என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளுடன், அதனுடன் வாழத் தயாராகும் கொள்கைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இல்லையெனில், எதிர்காலத்தில் வெப்ப அலைகள் வெறும் வானிலைச் செய்தியாக அல்லாமல், பொருளாதாரம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறும்.
– பா. முகிலன்
