உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உறவினர் ஒருவரின் 9 மாத பெண் குழந்தையை 12 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் கோபத்தையும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது.
குலாரிஹா பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நள்ளிரவு சுமார் 2 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது. தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தையை சிறுவன் ரகசியமாக அப்புறப்படுத்திச் சென்றுள்ளான். அவன் சண்டிகரில் இருந்து சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு கோரக்பூருக்கு வந்திருந்த உறவினர் மகன் ஆவான்.
மறுநாள் அதிகாலையில் குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர் தீவிர தேடுதல் நடத்தினர். வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் காயங்களுடன் குழந்தை மீட்கப்பட்டது. உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, பின்னர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த உறவுக்கார சிறுவன் மது அருந்திய நிலையில் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்த பின்னர் இந்த செயலைச் செய்ததாக ஒப்புக்கொண்டான். அவனது போனில் 50க்கும் மேற்பட்ட ஆபாச உள்ளடக்கங்கள் இருந்ததாக போலீசார் கூறினர். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறுவன் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குழந்தைகளுக்கு இடையிலான பாலியல் வன்முறை, மது மற்றும் ஆபாசப் பொருட்களின் தாக்கம், கிராமப்புற பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. உள்ளூர் மக்கள் குழந்தைகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
