உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் சம்பால் பகுதியைச் சேர்ந்த பைசான் அலி என்ற மாணவர், தனது கனவான மருத்துவக் கல்விக்கான நீட் (NEET) தேர்வுக்காக நீண்ட நாட்களாக கடுமையான உழைப்பை மேற்கொண்டு வந்தார். ஆனால், தேர்வு மையத்தைக் கண்டறிய கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை நம்பிய அவர், பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்.
கூகுள் மேப்ஸ் தவறான இருப்பிடத்தை காட்டியதால், பைசான் அலி முதலில் தவறான இடத்துக்கு சென்றார். பின்னர் உண்மையான தேர்வு மையத்தை அடைந்தபோது, நிர்ணயிக்கப்பட்ட நுழைவு நேரத்தை விட அதிக நேரம் தாமதமாகிவிட்டது. தேர்வு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஒரு முழு கல்வியாண்டை இழக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். தேர்வுக்காக தன் எல்லா நேரத்தையும் ஒதுக்கி, குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கில் தயாராகி வந்த மாணவரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதேபோன்ற சம்பவம் மற்றொரு மாணவருக்கும் நிகழ்ந்துள்ளது. சார்தக் என்ற மாணவரும் கூகுள் மேப்ஸ் காட்டிய தவறான தகவலின் அடிப்படையில் தேர்வு மையத்தை தேடிச் சென்றார். சரியான இடத்தை அடையும் முன்பே நேரம் கடந்துவிட்டதால் அவரும் தேர்வைத் தவறவிட்டார்.
நீட் தேர்வு என்பது இந்தியாவில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான நுழைவுத் தேர்வாகும். லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்காக ஆண்டு முழுவதும் தயாராகின்றனர். இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள் மாணவர்களின் உழைப்பை வீணடிப்பதோடு, அவர்களின் மன உளைச்சலையும் அதிகரிக்கச் செய்கின்றன. பல மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருவதால், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குறைவாக உள்ள பகுதிகளில் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடைகிறது.
இச்சம்பவங்கள் குறித்து உள்ளூர் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனம் துல்லியமான வரைபடத் தகவல்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேர்வு நடத்தும் அமைப்புகள் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இத்தகைய தொழில்நுட்பப் பிழைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
