மறைந்த பாடகி எஸ்.ஜானகிக்கு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது;-

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் பாராட்டிப் புகழப்பட்ட இசைக் குயில் ஜானகி அம்மையார் தன் 88 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மைசூர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி இடியென என்னைத் தாக்கிய நிலையில், நிலைகுலைந்து போய் துயரில் மூழ்கி உள்ளேன்.

கடந்த 50 ஆண்டுகளாக இரவிலும், பகலிலும், பயண நேரங்களிலும், துன்பம் சூழ்ந்த வேளைகளிலும் ஜானகி அம்மையாரின் தேனிசைப் பாடல்கள் எனக்கு அருமருந்தாக உதவின.

ஒன்பது வயதிலேயே மேடை ஏறிப் பாடிய ஜானகி, 18 வயதில் அகில இந்திய வானொலி நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் பரிசு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிய இமாலய சாதனையாளர் ஜானகி அம்மையார், நான்கு தேசிய விருதுகள், ஐந்து தமிழ்நாடு அரசின் விருதுகள், ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசுகளின் விருதுகள் என 33 விருதுகள் இவரைத் தேடி வந்து இசைப் புலமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தது.

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர இசையோடு போட்டி போட்டுக் கொண்டு சிங்கார வேலனே தேவா என்ற பாடல், இளையராஜாவின் இசையமைப்பில் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடல், இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்ற அவரின் இன்னிசை, பொன்மேனி உருகுதே என்ற அவரின் காந்தக் குரல், மாத உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினோம் என்ற அவரின் காந்தக் குரல், தேன் சிந்துதே வானம் என்ற அவரின் இனிய பாடல், டாடி டாடி என்று மழலைக் குரலில் அவர் பாடிய பாடல் என இப்படி நூற்றுக் கணக்கான நம் நெஞ்சம் கவர்ந்த பாடல்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும்?

1957 ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒலித்த ஜானகியின் குரல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. காதல், தாய்மை, அன்பு, தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு பண்பு நலன்களை வலியுறுத்தும் அவரது பாடல்கள் நெஞ்சம் மறக்காத தேனிசைப் பாடல்கள் ஆகும்.

அவரின் இனிமையான பாடல்கள் காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, இவ்வையகம் உள்ளவரை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் எந்நாளும் நம்மோடு வாழ்வார்!

அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் பிரிவால் துயரத்தில் மூழ்கி உள்ள குடும்ப உறவுகளுக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் வருமாறு;-

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட திரைப்பட பின்னனி பாடகி S. ஜானகி அவர்கள் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

S. ஜானகி அவர்கள் தனது இளம் வயதில் இருந்து திரையுலகில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி தேனிசை குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 18 மொழிகளில் சுமார் 48,000 பாடல்களை பாடிய சாதனையாளர்.

S. ஜானகி அவர்களின் இசைப் பணியை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் 4 தேசிய விருதுகளும், தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருதும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எண்ணிலடங்கா விருதுகளும் வழங்கி சிறப்பிக்கபட்டவர். அவரது இசைப் பணி காலம் கடந்து நிலைத்து நிற்கும்.

அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

நடிகர் ராகவா லாரன்ஸின் இரங்கல் பதிவு வருமாறு;-

RIP ஜானகி அம்மா, ஒரு ஐதீகப் பாடகி. அவரது குரல் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டது, அவரது பாடல்கள் மூலம் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி!

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version