தனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்திக்கு, தவெக தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தமிழக அரசியல் களத்தையே ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்திலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி வழியாகவும் விஜய்க்கு வாழ்த்துகளை பகிர்ந்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்து தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமருக்கான பதிலில், மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே, தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நமது மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே குறிக்கோளாகத் திகழ்கிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் முன்னேற்றத்திலும், தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் நாங்கள் முழுமையாகக் கவனம் செலுத்துவோம். இம்முயற்சியில் மத்திய அரசின் ஆதரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்களவையின் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்த இனிய நல்வாழ்த்துகளுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்! பொதுச்சேவையில் சிறந்து விளங்குவதிலும், அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படும் நமது மாநிலத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிக்காப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என ராகுல்காந்திக்கு பதில் தெரிவித்துள்ளார்.
