தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுற்றதும், ஐந்து மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 124 முதல் 154 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுக கூட்டணிக்கு 60 முதல் 80 தொகுதிகள் கிடைக்கும் எனவும், தமிழக வெற்றிக் கழகம் சிங்கிள் டிஜிட்டிலேயே வெற்றி பெறும், நாம்தமிழர் கட்சி எந்த தொகுதியையும் கைப்பற்றாது எனவும் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் திமுக, அதிமுகவின் வாக்குகளை தவெக பிரிக்கும் எனவும் கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 62 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து இ.வி.எம்மில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தவெகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இரண்டாவது இடத்தில் திமுகவும், மூன்றாமிடத்தில் அதிமுகவும் இருந்தன. நேரம் செல்லச் செல்ல, தவெக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.  இரண்டாமிடத்தை அதிமுக பிடித்துக் கொள்ள திமுக மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது. நாதக, தேர்தலில் இருந்தே காணாமல் போனது போல் மாறியது.

மாலையில் மீண்டும் கள நிலவரம் மாறியது. ஆனாலும் தவெக முதலிடத்திலேயே தொடர்ந்தது. திமுக இரண்டாவது இடத்திலும், அதிலிருந்து குறைந்த இடங்களைப் பெற்று அதிமுக மூன்றாமிடத்திலும் தொடர்ந்து.

இரவு 9 மணி நிலவரப்படி தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னணியில் தொடர்ந்தன. தவெகவில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். தவெக மொத்தம் 89 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. திமுக கூட்டணியில் திமுக 46, காங்கிரஸ் 3, ஐயூஎம் எல் 2, விசிக 2, சிபிஐ 2 சிபிஎம் 2தேமுதிக ஒரு இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் பதிவிட்டது. அதிமுக கூட்டணியில் அதிமுக 40 இடங்களிலும்  பாமக 2,  பாஜக, 1, அமமுக 1 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தவெக வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைய இருப்பது உறுதியாகி உள்ளது. பெரும்பான்மையான 118 சீட்டுகளைப் பெறுவதற்கான நடவடிக்கையில் தவெக இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டது. எனவே 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டின் ஆட்சியை தவெகவின் கரங்களில் மக்கள் ஒப்படைத்திருக்கிறார்கள்.

பரப்புரையின் போது கூறிய செயல்திட்டங்களை விஜய் செயல்படுத்தி, இந்தியாவில் தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு செல்வார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version