தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், 62ஆயிரத்து 992 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாமிடம் பிடித்துள்ள தவெக வேட்பாளரைவிட 7ஆயிரத்து 140 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
தனது வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்காக ராணிமேரி கல்லூரிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு தொகுதி மக்களுக்கு முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன் எனக் குறிப்பிட்டார்.
சேப்பாக்கம் தொகுதியில் தனது வெற்றிக்காக உழைத்த அத்தனை நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். ஓட்டு போட்டு இருக்கிறார்கள் அந்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாக பொறுப்பேற்க கூடிய அரசுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக, வெற்றிச் சான்றிதழ் பெற ராணி மேரி கல்லூரிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது தவெகவினர் விசில் அடித்து டிவிகே டிவிகே என கோஷமிட்டனர். பதிலுக்கு திமுகவினரும் கோஷமிட்டத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
