இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வரும் சூழலில், நேபாளப் பிரதமர் பாலன் ஷா நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நேபாள நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், எல்லைப் விவகாரம் ஒருதலைப்பட்சமானது அல்ல என்று குறிப்பிட்டார். நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான் இந்த அதிர்ச்சிகரமான உண்மை எனக்குத் தெரியவந்தது. இந்திய நிலப்பரப்பை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும் புகார்களும் இதில் அடங்கும். இந்தியா மட்டும் நேபாளத்தின் எல்லையை ஆக்கிரமிக்கவில்லை; நேபாளமும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளைப் பல இடங்களில் ஆக்கிரமித்துள்ளது.
மேலும், இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் எல்லைப் பிரச்சனைகள் குறித்த உண்மைகளைத் தீர ஆராய்ந்து, நண்பர்களாக அமர்ந்து பேசி சுமூகமாகத் தீர்க்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியாவுக்கு நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக தூதரகக் குறிப்பை அனுப்பியிருந்ததாகவும், அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து பதில் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் வரலாற்று ஆசிரியர்கள், நில அளவையாளர்கள் மற்றும் எல்லை நிபுணர்களைக் கொண்டு தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் விளக்கினார்.
பிரதமரின் இந்த பேச்சு நேபாள அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நேபாள வெளியுறவு அமைச்சகம் உடனடியாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
அதில், “பிரதமர் குறிப்பிட்ட ‘ஆக்கிரமிப்பு’ என்பது இரு நாட்டு எல்லைகளுக்கு இடையே உள்ள ‘நோ-மேன்ஸ் லேண்ட்’ (No-man’s land) பகுதியில் நிலவும் எல்லை தாண்டிய நில பயன்பாட்டைக் (Cross-border occupation) குறிப்பதாகும். எல்லையைக் குறிக்கும் தூண்கள் சேதமடைந்துள்ளதால், சில இடங்களில் இந்தியப் பகுதியில் நேபாள மக்களும், நேபாளப் பகுதியில் இந்திய மக்களும் விவசாயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையே பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்” எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
