தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்ற பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது காங்கிரஸ். இந்த ரேஸில் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சொர்ணா சேதுராமன் என 3 பேர் உள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தல் என்பது 50 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றையே மாற்றி அமைத்திருக்கிறது எனலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் களம் அதகளமாக இருந்தது. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என கட்சிகள் அங்கும், இங்கும் அல்லோலப்பட்டனர்.

குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்றைய தேர்தலில் மிகப்பெரிய வரலாற்றை படைத்திருக்கிறது எனலாம். அப்படி இருக்க, தேர்தலுக்கு முன்பு பல கட்சிகளும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முற்பட்டன. குறிப்பாக தேசிய கட்சியான காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல்காந்தியும் அதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஜனநாயகன் பட விவகாரத்தில் ராகுல்காந்தி வெளிப்படையாக ஆனால் தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை தலைமையின் இந்த முடிவை ஏற்காமல் திமுகவுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டும் என அடம்பிடித்தார். திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை பயங்கர இழுபறியில் சென்றது.

மத்தியில் இருந்து பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் ஜோடங்கர் என பலரும் திமுகவுடன் அதிக தொகுதிகளை கேட்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த இழுபறியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ப.சிதம்பரத்திடம் ஆலோசனை நடத்தி இங்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.

அவரது தலையீட்டுக்கு பிறகே 28 தொகுதிகள் என திமுகவுடன் சமரசம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக காங்கிரஸ் எம்பிகளான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் வெளிப்படையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த கூட்டணியில் உடன்பாடு இல்லாததாலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவில்லை எனவும் பேசப்பட்டது.

இன்று தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் 105 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க காத்திருக்கிறது. ஆனால் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையே தனது தொகுதியில் தோல்வி அடைந்தது ஒருபுறம், குறைவான இடங்களை காங்கிரஸ் பெற்றதற்கு செல்வப்பெருந்தகையே காரணம் என கூறப்படுகிறது.

இதே காங்கிரஸ் தலைமையின் முடிவுப்படி தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது 100 இடங்களை பெற்று, வெற்றி இடங்களையும் அதிகரித்திருக்கலாம் என தலைமை நம்புகிறது. ஆகையால், செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது தவெகவுக்கு பெரும்பான்மை தேவைப்படுவதால், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், தான் தொடர்ந்து தலைமை பதவியில் இருக்கவே விரும்புவதாக செல்வப்பெருந்தகை ஏற்கனவே கூறி இருந்த நிலையில், அது சரிபட்டு வராது என தலைமை கருதுகிறது. ஆகையால் தமிழ்நாட்டுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரேஸில் ஏற்கனவே எம்.பிக்களாக உள்ள ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் மற்றும் சொர்ணா சேதுராமன் என மூன்று பேர் உள்ளனர். ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இருவருமே, தலைமை மீதான தங்களது எதிர்ப்பை வெளிப்படையாக முன்வைத்துள்ளனர். அத்தோடு ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்களும் கூட. சொர்ணா சேதுராமனை பொருத்தவரை அமைதியானவர், ராகுல்காந்திக்கு தெரிந்த முகம் மற்றும் பண வசதி படைத்தவர். ஆகையால் இந்த ரேஸில் மூன்று பேரும் முன்னிலையில் உள்ளனர்.

இன்னொருபக்கம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இளைஞர் அணியில் இருந்து கிறிஸ்டோபரை இறக்கியது போல், புதிய முகத்தை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி இருந்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைக்குமா? யார் அடுத்த காங்கிரஸ் தலைவர்? என்ற கேள்விகளில் நிற்கிறது காங்கிரஸ்..

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version