அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட்ட அறிவிப்புக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த சபாநாயகர், எடப்பாடி பழனிசாமி அளித்த மன்னிப்பு கடிதத்தின் அடிப்படையில் 21 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று அறிவித்தார். அதே நேரத்தில், பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகிய 4 பேரின் தகுதி நீக்க மனுக்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், சபாநாயகர் பிரபாகரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த மீதமுள்ள நான்கு உறுப்பினர்கள் மீது ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அதிமுகவில் கொறடா தொடர்பான அதிகாரப்பூர்வ நிலை என்ன என்பதையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். தற்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியா அல்லது விஜயபாஸ்கரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் நிலை என்ன என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
21 பேருக்கு வழங்கப்பட்ட நிவாரணம் வெறும் மன்னிப்பு (condonation) அடிப்படையிலானதா அல்லது தகுதி நீக்க மனுவே அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பை, சட்டப்பேரவை விதிகளின்படி அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக (Notification) வெளியிடப்பட வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பாவுவின் இந்த கருத்துகள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் மேலும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
