அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியாவின் 15 வயது இளம் அற்புதம் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவனில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பை வென்ற ஜோடியான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரையே தொடக்க வீரர்களாகக் களம் இறக்கியது. இப்போட்டிகளில் ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் வரிசையும் சொதப்பியதால், அயர்லாந்திடம் 2-0 என்ற கணக்கில் இந்தியா அவமானகரமான தொடர் தோல்வியைச் சந்தித்தது. “வைபவ் சூர்யவன்ஷியை அணியில் எடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்குமே” என ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் விளக்கம் அளித்துள்ளார்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரியான் டென் டோஸ்கேட், “வைபவ் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முழுத் தகுதியோடு இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், சஞ்சு சாம்சன் மூன்று மாதங்களுக்கு முன்பு நாம் உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். அவருக்கும் நல்ல ஐபிஎல் சீசன் அமைந்தது. வீரர்களுக்குத் தொடர்ந்து நீண்ட வாய்ப்புகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவதைப் பார்க்க நாங்களும் ஆவலாக உள்ளோம், ஆனால் மற்ற வீரர்களைப் போல அவரும் உரியச் செயல்முறைகளைக் கடந்து வர வேண்டும்” என்று கூறினார்.

பெல்ஃபாஸ்ட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 155 ரன்கள் என்ற சுமாரான இலக்கைத் துரத்திய இந்தியா, ஹர்ஷித் ராணாவின் அதிரடிப் போராட்டத்தையும் மீறி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக டி20 தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்தியாவின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னதாக 2023-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியா டி20 தொடரை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version