கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்.
ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியாக தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்பிலும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். பணம் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
பாதுகாப்புக் காரணங்களை மனதில் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய்யிடம் டெல்லியில் இரண்டு நாட்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாக விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கடந்த 11-ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. இதுவரை 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 4 போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடி உரையாடல், அவர்களின் தேவைகளை அறிந்துகொள்ளும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் மூலம் விஜய் அரசு மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதையும், முதலமைச்சரின் இந்தப் பயணம் எந்த அளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதையும் அடுத்த சில வாரங்கள் தீர்மானிக்கும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதுடன், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
