பெண்களுக்கு எதிரான குற்றங்களை அறவே ஒழித்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசால் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ தொடங்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த நிலையில், இப்படையின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து ஐ.ஜி. பவானீஸ்வரி சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நேற்று டிஜிபி அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ஆபத்தான சூழலில் இருக்கும் பெண்களை உடனடியாக மீட்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதுமே இப்படையின் முதன்மைப் பணி. பேருந்து நிலையங்கள், பொது இடங்கள் மற்றும் அலுவலகப் பகுதிகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, சீருடையிலும் சாதாரண உடைகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வர்.

பட்ஜெட் மற்றும் ஆள்சேர்ப்பு: இத்திட்டத்திற்காக ரூ. 357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், புதிதாக 2,545 காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குழுக்கள் அமைப்பு: தமிழகம் முழுவதும் 70 சிறப்புப் படைகள் (சென்னையில் 12 தனிப்படைகள் உட்பட) அனுப்பப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இது 270 குழுக்களாக விரிவுபடுத்தப்படும். மனிதர்கள் நேரடியாகச் சென்று கண்காணிக்க இயலாத இடங்களைக் கண்காணிக்க 49 நவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தச் சிறப்பு அதிரடிப் படையில் ஒரு திருநங்கையும் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படையில் உள்ள காவலர்களுக்குத் தற்காப்புக் கலைகள் மற்றும் எதிர்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைக்கு அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. எனினும், பணிச் சூழலின் தேவையைப் பொறுத்து எதிர்காலத்தில் துப்பாக்கிகள் வழங்கப்படும் என்று ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத் தடுப்புப் பிரிவு, மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து இப்படையினர் பணியாற்றுவர். அவசரக் காலங்களில் 100, 112, 1091 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டால் இந்தச் சிங்கப்பெண் படையினர் உடனடியாக உதவ விரைந்து வருவார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version