அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தான் என்ன உலகத் தவறா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி இருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிக விரைவில் மாற்றம் வரும் என்றார். யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டும் பாடமாக சட்டமன்றத் தேர்தல் அமைந்துவிட்டது என்றார். தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்ததாக எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என்ன உலகத் தவறா என தெரிவித்தார். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக உருவாகி 54 ஆண்டுகளாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுகவினர் தங்களின் பங்காளிகள் போன்றவர்கள் என்றார்.
அதற்காக கூட்டணி அமைக்கிறோம் என்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார். திமுக, அதிமுகவும் சட்டப்பேரவையில் தற்போது ஒரே வரிசையில் அமர்ந்துள்ளதாகவும், காலம் கணிந்து இரு கட்சிகளையும் ஒரே அணியில் அமர வைத்துள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதைப்பார்க்கும் இருகட்சிகளும் ஒன்றாக இணைந்துவிட்டதாக தோன்றுகிறது என தொண்டர்கள் நினைப்பதை சிலரும் பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.

