1999 கார்கில் போரில் இந்தியா பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் 27வது ஆண்டு விழா இன்று (ஜூலை 26) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தருணத்தில், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த 527 வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது அஞ்சலியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
27வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “கார்கில் வெற்றி தினத்தன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் தங்கள் அசாதாரணமான தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய வீரர்களுக்கு நமது தேசம் நன்றியைத் தெரிவிக்கிறது. மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அவர்களின் வீரம், என்றென்றும் தேசியப் பெருமையின் ஆதாரமாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத தேசபக்தியும் கடமையுணர்வும் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
கார்கில் வெற்றி தினம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “கார்கில் விஜய் திவாஸ் இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சல் மற்றும் அசாதாரண வீரத்தின் சின்னமாக விளங்குகிறது. 1999-ல், இமயமலையின் அபாயகரமான, பனி மூடிய சிகரங்களுக்கு மத்தியில் உயரமான இடங்களில் அமைந்திருந்த எதிரி நிலைகளையும், பாதகமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்ட போதிலும், நமது வீரர்கள் ‘ஆபரேஷன் விஜய்’ மூலம் எதிரிகளை மண்டியிடச் செய்தனர். தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்க தங்களின் உயிரையே தியாகம் செய்த அனைத்து வீர மைந்தர்களுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார்.
சனிக்கிழமையன்று டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவுக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றுகையில், 1999-ஆம் ஆண்டு மோதலுக்குப் பிறகு எதிராளிகளின் ஊடுருவல் நோக்கம் மாறவில்லை என்று எச்சரித்தார். மறைமுகப் போர் மற்றும் ஊடுருவல் போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாகத் தயாராக உள்ளது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும், ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் மூலம் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதிலும், அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவதிலும் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் தனது தாழ்மையான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். “உங்கள் துணிச்சல், வீரம் மற்றும் உன்னத தியாகத்திற்கு தேசம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
