மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் திலக் நகர் பகுதியில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் காலனியில், இன்று (மார்ச் 18) அதிகாலை சுமார் 3:30 முதல் 4:30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தொழிலதிபர் மனோஜ் புகாலியா என்பவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனத்தை (Electric Vehicle) சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சார்ஜிங் பாயிண்ட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த காருக்கும், பின்னர் மூன்று அடுக்குக் குடியிருப்பு முழுவதும் பரவியது.

இந்த விபத்து இவ்வளவு மோசமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக, அந்த வீட்டில் சுமார் 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தீ பரவியவுடன் அவை ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறியதால், தீயணைப்பு வீரர்களால் கூட உடனடியாக உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவதாக, வீட்டின் கதவுகள் அனைத்தும் ‘எலக்ட்ரானிக் லாக்’ (Electronic Locks) முறையில் இருந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் அந்தத் தானியங்கி கதவுகள் ஜாம் ஆகிவிட்டதால், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தீயிலும் புகையிலும் சிக்கிக் கொண்டனர்.

https://x.com/anshuman_sunona/status/2034142129023553841?

இந்தக் கோர விபத்தில் 6 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தை நேரில் ஆய்வு செய்த மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், இது குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை அமைத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்வது குறித்து புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விரைவில் வெளியிடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version