ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்தில் எம்.பி. சசி தரூர் கலந்து கொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் முக்கிய கட்சி கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாதது காங்கிரசுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது, அவரது உறுதிப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தநிலையில், இன்று ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளவில்லை. இதனால், முக்கிய விவாதங்களில் அவர் தொடர்ந்து கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கேள்விகள் எழுந்தன. தரூர் முன்கூட்டியே தலைமைக்கு தகவல் தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், அவர் கலந்து கொள்ளாததற்கான காரணம் தனக்குத் தெரியாது என்று காங்கிரஸ் தலைமை கொறடா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திருவனந்தபுரம் தொகுதியின் பிரதிநிதியான சசி தரூர், சண்டிகர் எம்.பி. மணீஷ் திவாரியுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவரது பொது நிகழ்ச்சி நிரலின்படி, தரூர் நேற்று இரவு பிரபா கைதான் அறக்கட்டளை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிக்காக கொல்கத்தாவில் இருந்தார். இதன் காரணமாக அவர் கூட்டத்திற்கு சரியான நேரத்தில் டெல்லிக்குத் திரும்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த நவம்பர் 30ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் உத்திக் குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்வில்லை. ஆனால் தான் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்றும் . அந்தக் கூட்டம் நடந்தபோது தான் கேரளாவிலிருந்து விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அவர் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
