டெல்லியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்குப் பார்வை மிக்க தலைமையின் கீழ், தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்திவாய்ந்த சமூக மாற்றக் கருவியாஅக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.
விளையாட்டின் மூலம் இளைய தலைமுறையினருக்கு அதிகாரமளித்து, அவர்களை நாளைய சாதனையாளர்களாக உருவாக்கும் பணியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முனைப்புடன் செயல்படுகிறது. ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி, உலகளாவிய விளையாட்டு வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் லட்சத்திற்கு தமிழ்நாடு முழு ஆதரவையும், பங்களிப்பையும் வழங்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று டெல்லியில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முன்மொழிவுத் திட்டங்களை அமைச்சர் முன்வைத்தார்.
சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க கோரிய முன்மொழிவினை இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்டது. இப்போட்டிகள் நடத்தப்படுவதால் தமிழ்நாட்டின் நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான அடித்தளமாக இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ‘திருச்சி ஒலிம்பிக் அகாடமி’ வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இயலும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 1,076 கி.மீ. நீள கடற்கரையையும், இளம் திறமையான விளையாட்டு வீரர்களின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விளையாட்டை ஊக்குவிகும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை பாராட்டி, தனது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
