நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்த விவாதத்தில், திமுக எம்பி கனிமொழி தென்மாநிலங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் பேசியது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், கருப்பு ஆடைகள் அணிந்து நாடாளுமன்றத்தில் பங்கேற்றனர். இன்று இது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாளிலும் திமுக எம்.பி.க்கள் கருப்பு ஆடைகளை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய கனிமொழி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதி மறுவரையறை குறித்து அவையில் அளித்த வாக்குறுதிகளுக்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் உள்ள அம்சங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பதாக மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்மாநிலங்கள் தண்டிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் ஆவேசமாக முழங்கினார்.
தற்போதைய மசோதாவைக் குறித்துப் பேசிய கனிமொழி, “அமித்ஷா அவர்கள் வெளியே பேசும்போது 50% உயர்வு என்ற அடிப்படையில் தொகுதி மறுவரையறை இருக்கும் எனக் கூறுகிறார். ஆனால், மசோதாவில் உள்ள விதிகளோ 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த மறுவரையறை நடைபெறும் எனக் குறிப்பிடுகிறது. அமித்ஷா சொல்வது ஒன்று, ஆனால் மசோதாவில் இருப்பது வேறாக உள்ளது; இந்த முரண்பாடு ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மத்திய அரசின் இத்தகைய தெளிவற்ற போக்கு தென்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மறுவரையறை செய்தால் ஏற்படும் ஆபத்துகளை அவர் பட்டியலிட்டார். “இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்றத்தில் சுமார் 11 இடங்கள் வரை குறையும் அபாயம் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை முன்னுதாரணமாகச் செயல்படுத்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பறிப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று கனிமொழி கேள்வி எழுப்பினார். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் பேச கூட நேரம் கிடைக்காது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறுவதால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை 2 வாரத்திற்கு ஒத்திவைக்க கோரினோம். 2 வாரங்கள் கூட காத்திருக்க முடியாமல் மசோதாக்களை கொண்டு வந்துள்ளீர்கள்?
எம்.பி.க்கள் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தினால், தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்குக் கூட இல்லாமல் 3ல் 2 பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பை |திருத்த முடியும். தெற்கின் அனுமதி இல்லாமல் நாட்டின் அரசியல் அடிப்படையையே மாற்ற முடியும்.
மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி. அரசியலமைப்பு 334A பிரிவை திருத்தி, மகளிர் இட ஒதுக்கீட்டை ஏன் தொகுதி மறுவரையறையில் இருந்து பிரிக்க மறுக்கிறீர்கள்? சுழற்சி முறையில் 543 எம்.பி.க்களில் 3ல் ஒரு பங்கை மகளிருக்கு ஒதுக்குவதில் என்ன சிக்கல்?
எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது என்று பகிரங்கமாக பேசியுள்ளார்.
