பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது, இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகளும் பதிவாகிய நிலையில், பீகார் மாநிலத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வரும் நிலையில் பிற்பகல் 3 மணி வரை 121 சட்டமன்ற தொகுதிகளில் 53.77% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக செரியா-பரியார்பூர் சட்டமன்ற தொகுதியில் 62.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராஹோபூர் சட்டமன்ற தொகுதியில் 55.20% வாக்குகளும் , பீகாரில் 2 துணை முதலமைச்சர்கள் போட்டியிடும் தாராப்பூர் சட்டமன்ற தொகுதியில் 55.33% வாக்குகளும் , லக்கிசாராய் சட்டமன்ற தொகுதியில் 55.47% வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிகார் மாநிலத்தில் குறைந்தபட்சமாக திகா சட்டமன்ற தொகுதியில் 31.89% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது இந்திய தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக-அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி – சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி – கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகு​தி​களில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version