ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களையும் கூறிவருகின்றனர். இந்தநிலையில், பட்ஜெட் தினத்தையொட்டி தொடர்ச்சியாக காணப்படும் பாலினப் பாகுபாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

அதில், பட்ஜெட் குறித்து செய்யும் தனது பணியை விட, பொதுமக்களின் கவனம் தன் உடை  மீது திரும்புகிறது என்றும், இத்தகைய பார்வையை ஆண் நிதியமைச்சர்கள் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்வதில்லை என்றும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தில் நான் என்ன உடை அணியப்போகிறேன் என்பதைக் குறித்து எழும் கேள்விகள் எனக்கு மன அழுத்தமாக மாறிவிடுகின்றன. பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது எந்த ஆண் நிதியமைச்சரிடமாவது இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டதுண்டா? ஆண்களிடம் இதைக் கேட்க மாட்டார்கள். ஆனால் எனது உடையும் கூட பட்ஜெட் விவகாரமாக மாற்றப்படுகிறது,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

பொதுமக்கள் கருத்துகளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், “அட, என்ன புடவை இது? என்ன படிக்கப் போகிறார், என்ன சொல்லப் போகிறார்” போன்ற கருத்துகள், உள்ளடக்கத்தை விட தோற்றத்திற்கே தேவையற்ற முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார். இவை தீங்கானவை அல்ல என்றாலும், அவசியமில்லாத திசையில் செல்கின்றன என்றும், பெண்களுக்கு இது மன அழுத்தமாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அந்த அழுத்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், “நான் விரும்பியதை அணிவேன்” என்றும், இத்தகைய விவாதங்கள் தொழில்முறை எல்லைகளை மீறுகின்றன என்றும் தெரிவித்தார்.

சமத்துவத்தை வலியுறுத்திய நிர்மலா சீதாராமன், “ஒரு ஆணை எப்படி நடத்துகிறீர்களோ, அதேபோல என்னையும் நடத்த வேண்டும். அதுவே உண்மையான சமத்துவம். ‘பெண் என்பதால் சிறப்பு சலுகை வேண்டுமா?’ அது ஏற்றுக்கொள்ள முடியாது; உங்கள் திறமையை வேலையில் காட்டுங்கள்,” என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்த கைத்தறி நெசவு செய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையை அணிந்திருந்தார். அவர் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சரவைக் கூட்டத்திலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நடந்த கலந்துரையாடல்களின்போதும் எடுத்துரைத்தார். பிரதமர் இதை ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் குறிப்பிட்டார்.

பெண் வெறுப்பு சார்ந்த விமர்சனங்களுக்கு அடிக்கடி இலக்காகி வரும் நிர்மலா சீதாராமனின் செல்வாக்கு, அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகளாவிய வர்த்தக இடையூறுகள் போன்ற நெருக்கடிகளின்போது அவர் பொருளாதாரக் கொள்கையை வழிநடத்தியது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

பட்ஜெட்டிற்கு பிறகு, பல இளம் பெண்கள் உட்பட மாணவர்களிடம் பேசிய நிதியமைச்சர், தனது உடை மீது மீண்டும் மீண்டும் கவனம் செலுத்தப்படுவது, தலைமைப் பதவிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு ஆழமான பிரச்சினையை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version