கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் வெற்றிக்கும், இடதுசாரி கூட்டணி தோல்விக்கும் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
தற்போதைய முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 100 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 36 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
இந்த மாற்றம், கேரளாவில் ஆட்சி மாற்றத்துக்கான வாக்காளர்களின் மனநிலையே மாறியிருப்பதையே வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கான வெற்றியின் காரணங்கள் என்ன, இடதுசாரி கூட்டணி வீழ்ச்சி அடைந்தது ஏன் என்பதற்கான விரிவான காரணங்கள் இங்கே…
1. மாற்றத்திற்கான வாக்காளர்களின் விருப்பம்
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்த இடதுசாரி கூட்டணி மீது மக்களிடையே இயல்பான ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவானது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்ற விஷயங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தனர். நடுத்தர வர்க்கம் பொருளாதார அழுத்தத்தை உணர்ந்தது நகர்ப்புறங்களில் “புதிய நிர்வாகம் வேண்டும்” என்ற மனநிலை வலுத்தது. இந்த சூழலில், காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி “மாற்றம்” என்ற கோஷத்தை திறமையாக பயன்படுத்தியது.
2. பிரசாரம் மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பு
காங்கிரஸ் கடந்த தேர்தலை விட இந்த முறை மிகச்சிறந்த அடிமட்ட கட்டமைப்பை உருவாக்கியது. உள்ளூர் தலைவர்களை முன்வைத்து வாக்காளர்களை அணுகியது, சிறு கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்கு பிளவை குறைத்தது, பிராந்திய பிரச்சினைகளை மையமாக வைத்து மேற்கொண்ட தனித்துவமான பிரசாரம் போன்ற அனைத்தும் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன.
இடதுசாரி கூட்டணி தோல்விக்கான காரணங்கள்
1. நீண்டகால ஆட்சியின் சோர்வு
பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு பல திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், நீண்டகால ஆட்சியின் காரணமாக மக்களிடையே இயல்பாக ஏற்பட்ட ஆட்சி மாற்ற விருப்பம், சில நிர்வாக முடிவுகள் மீதான விமர்சனங்கள், அதிகார மையப்படுத்தல் குறித்த குற்றச்சாட்டுகள் போன்றவை வாக்காளர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
2. உள்ளூர் அளவிலான எதிர்ப்பு மற்றும் பிரச்சினைகள்
சில பகுதிகளில், உள்ளாட்சி நிர்வாகம் குறித்த அதிருப்தி, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் மீதான எதிர்ப்பு, உட்கட்சி பிரச்சினைகள் போன்றவை இடதுசாரி கூட்டணிக்கு எதிராக வாக்கு பிளவை அதிகரித்தன. குறிப்பாக, நகர்ப்புறங்களில் இளம் வாக்காளர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு திரும்பியதாக தேர்தல் பகுப்பாய்வுகள் காட்டுகின்றன.
வாக்காளர் மனநிலை மாற்றம்
இந்த தேர்தலில் மிக முக்கியமான அம்சம், இடதுசாரிகளின் பாரம்பர்ய வாக்கு வங்கியில் ஏற்பட்ட மாற்றம். பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்கு போக்கில் ஏற்பட்ட மாற்றமும் மத மற்றும் சமூக அடிப்படையிலான வாக்கு சீரமைப்பு, “நிலையான அரசா மாற்றமா என்கிற விவாதத்தில் மாற்றத்துக்கே மக்கள் அதிக அளவு ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் சாதகங்களாக அமைந்தன.
முதல்வர் யார்?
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்கிற விவாதம் தீவிரமாக எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கான போட்டியில் முக்கியமாக மூன்று பேர் பேசப்படுகின்றனர்:
வி.டி. சதீஷன் – தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், ரமேஷ் சென்னிதாலா – அனுபவமிக்க முன்னணி தலைவர், கே.சி. வேணுகோபால் – டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவர். இந்த மூவரில் யாரை தேர்வு செய்வது என்பது காங்கிரஸ் உயர்மட்ட தலைமைக்கு சவாலான முடிவாக இருக்கும்.
காங்கிரஸ் கட்சி வழக்கப்படி, சட்டமன்றக் குழு கூட்டம் நடைபெறும். பார்வையாளர் நியமிக்கப்படுவார். இறுதி முடிவு அகில இந்திய காங்கிரஸ் மூலம் எடுக்கப்படும். அதாவது, எம்.எல்.ஏ-க்களின்ஆதரவு மற்றும் டெல்லி காங்கிரஸ் மேலிட ஒப்பதல் ஆகிய இரண்டும் சேர்ந்தே முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும்.
இந்த கேரளா தேர்தல் ஒரு முக்கியமான அரசியல் செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் மாற்றத்தை விரும்பினர், காங்கிரஸ் அதை சரியாகப் பயன்படுத்தியது என்பதுதான் அது.
