‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party) என்ற டிஜிட்டல் நையாண்டி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகக் கணக்கு மீதான தடையை உடனடியாக நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், “சமூக ஊடகங்களில் செயல்படும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவர்கள்” என்று விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளம்பியது. தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கமளித்தார்.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே என்பவர், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் கணக்குகளைத் தொடங்கினார். இந்தக் கணக்குகளைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு கோடியைத் தாண்டியது. இதில் பின்தொடர்பவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு இந்த சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்தது.

இந்தத் தடையை நீக்கக் கோரி, இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகில் சிபல், சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், எனவே கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வாதிட்டார். மேலும், முந்தைய வழக்குகளில் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த நீதிமன்ற அமர்வு, மற்ற வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்டு, தடையை உடனடியாக நீக்க மறுத்துவிட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version