தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகிய நான்கு முக்கியத் தலைவர்கள் தற்போது காணொளி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் திமுக விதித்துள்ள காலக்கெடு குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தரப்பில் 25 முதல் 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 34 இடங்களுக்குக் குறையாமல் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. மேலும், ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 5-ம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று மாலைக்குள் (மார்ச் 3) தனது முடிவை அறிவிக்குமாறு காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. இந்தச் சிக்கலான சூழலில், கூட்டணியைத் தொடர்வதா அல்லது கூடுதல் இடங்களைப் பெற அழுத்தம் கொடுப்பதா என்பது குறித்து ராகுல் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய முடிவை எடுக்க உள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் இந்த உயர்மட்டக் குழுவின் முடிவைப் பொறுத்தே, தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் இன்று மாலைக்குள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version