மும்பை பைதோனி பகுதியில் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள முகால் கட்டிடத்தில் வசித்து வந்த அப்துல்லா டோக்காடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் அவர்களது மகள்களான ஆயிஷா (16), ஜைனாப் (13) ஆகியோர் சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். விருந்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

உணவு உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, நான்கு பேருக்கும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் அவர்களுக்குத் தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மகள்கள் இருவரும் சுயநினைவின்றி மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவர்களை உடனடியாக ஜே.ஜே. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஒரு சிறுமி உயிரிழக்க, சிகிச்சை பலனின்றி மற்றொரு சிறுமியும் மரணமடைந்தார். சோகம் நீங்கும் முன்பே, சில மணி நேர இடைவெளியில் பெற்றோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் இது ‘உணவு நச்சு’ (Food Poisoning) காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் ஏதேனும் நச்சுத்தன்மை இருந்ததா அல்லது பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிட்டதால் ஏற்பட்ட ரசாயன மாற்றமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வீட்டில் மீதமிருந்த தர்பூசணித் துண்டுகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், அவற்றை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
