கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்ற இலக்குடன், அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காகப் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, முதன்முறை வாக்களிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்க “வாக்களிப்பு ஒரு இனிமையான தொடக்கம்” (Vote Sweetened Kerala) என்ற பெயரில் புகழ்பெற்ற கேரளா அல்வா இனிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த இனிப்பு வழங்கப்பட்டு, வாக்களிப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்றத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல ஏதுவாக, முன்னணி தனியார் போக்குவரத்து நிறுவனமான ஊபர் (Uber) உடன் இணைந்து எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இலவசப் பயணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் கார், ஆட்டோ அல்லது பைக் மூலம் குறிப்பிட்ட தூரம் வரை இலவசமாகச் செல்ல சிறப்பு ‘கூப்பன்கள்’ வழங்கப்படுகின்றன. மேலும், குடும்பத் தலைவிகளை அதிகளவில் வாக்குச்சாவடிக்கு வரவழைக்க, வாக்கு செலுத்திவிட்டு விரலில் மை வைத்திருப்பவர்களுக்கு அரசு விற்பனை நிலையங்கள் மூலம் வெறும் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மாவு வழங்கும் சிறப்புத் திட்டமும் குறிப்பிட்ட மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுமட்டுமின்றி, பிரபல காபி மற்றும் உணவகங்களுடன் இணைந்து வாக்காளர்களுக்குத் தள்ளுபடி விலையில் சிற்றுண்டிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் உள்ள கூட்ட நெரிசலை வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ள பிரத்யேகச் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் இந்த நூதன முயற்சிகள் வாக்குப்பதிவு சதவீதத்தை எந்த அளவிற்கு உயர்த்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version