இஸ்ரேல், அமெரிக்காவுடனான மோதலில், வளைகுடா நாடுகளில் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது கவலையளிப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள கனடா பிரதமர் கார்னியுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சு வார்த்தை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பின் இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய இந்திய பிரதமர் மோடி கூறியதாவது, பல உலகளாவிய பதட்டங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. புது டெல்லி தொடர்ந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுக்கிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து தகராறுகளுக்கும் தீர்வு காண இந்தியா ஆதரவளிக்கிறது. வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
