மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு (Bekaa Valley) மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள பால்பெக் (Baalbek) பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் கட்டிடம் தரைமட்டமானது.
இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவரான ஹுசைன் யாகி (Hussein Yaghi) கொல்லப்பட்டார். இவர் முன்னாள் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது யாகியின் மகன் ஆவார்.
லெபனான் பாதுகாப்பு வட்டாரங்களின்படி, இந்தத் தாக்குதலில் 10 முதல் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; 149 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
