ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து வணிகர்களின் அமைப்பு (AIOCD) சார்பில் நாளை (மே 20, புதன்கிழமை) ஒரு நாள் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதிய மருத்துவப் பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் தகுந்த சரிபார்ப்புகள் இல்லாமல் இணையவழியில் மருந்துகள் விநியோகிக்கப்படுவதற்கு மருந்து வணிகர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனையின்றி வலி நிவாரணிகள், தூக்க மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் போன்றவை ஆன்லைன் மூலம் எளிதாகக் கிடைப்பதால், அது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனர்.

கார்ப்பரேட் ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் அதீத தள்ளுபடிகளால், பாரம்பரிய உள்ளூர் சில்லறை மருந்துக்கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்ட மின்னணு மருந்தக (e-pharmacy) அரசாணையை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் மூடப்படவுள்ளன. தமிழகத்தில்: தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை சுமார் 42,000 மெடிக்கல் ஷாப்கள் இயங்காது என்பதால் மருந்துகள் வாங்குவதில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மருந்தகங்கள் மூடப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அவசரத் தேவைகளையும் சிரமங்களையும் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அனைத்து மருந்துகளும் தடையின்றி, போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாகக் கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களால் (Comorbidities) பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர மருந்துச் சேவைகள் எவ்விதத் தங்குதடையுமின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version