கோவா தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அர்போரா கிராமத்தில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவா காவல்துறை உயர் அதிகாரி அலோக் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 3 பெண்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பம்போலிமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த தீ விபத்து சமையலறையில் இருந்த சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போதைய தகவலின்படி விபத்தில் 3 பெண்கள் 20 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் சுற்றுலா பயணிகள். மற்றவர்கள் சமையலறை மற்றும் விடுதி ஊழியர்கள். சுற்றுலா காலகட்டத்தில் இதுவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
