மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழல், இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக்சபாவில் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்தியாவையும் எட்டியுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி தனது உரையில், மேற்காசியாவில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர்ச் சூழல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கடந்த 2 முதல் 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் விரிவான தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார்.
“இந்த நெருக்கடி நிலை தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இது உலகப் பொருளாதாரத்திலும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. எரிபொருள் விநியோகம் முதல் விநியோகச் சங்கிலி வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பிரச்சனைக்கு எவ்வளவு விரைவில் தீர்வு காண முடியுமோ, அவ்வளவு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகமும் சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறது,” என்று தெரிவித்தார்.
“இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் உரத் தேவையில் பெரும் பகுதியை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறுகிறது. தற்போதைய போர்ச் சூழலால் இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது கவலைக்குரியது. இருப்பினும், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி (LPG) தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,” என்று உறுதியளித்தார். குறிப்பாக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில் (LPG) 60% இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 90% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது என்பதை குறிப்பிட்டார்.
மேலும், மேற்காசியாவில் நீடித்து வரும் இந்தப் போர், இந்தியாவிற்கு முன்னெப்போதும் இல்லாத புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இவை வெறும் பொருளாதாரச் சிக்கல்கள் மட்டுமல்ல; நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையிலும் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
இந்தியா, போரில் ஈடுபட்டுள்ள மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மேற்காசிய நாடுகளுடன் மிக விரிவான மற்றும் ஆழமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. தற்போது போர் நடைபெற்று வரும் இந்தப் பிராந்தியமானது, உலக நாடுகளுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்திற்கும் ஒரு மிக முக்கியமான வழித்தடமாகும். குறிப்பாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (Gas) தேவையின் பெரும்பகுதியை இந்தப் பிராந்தியமே பூர்த்தி செய்து வருகிறது,” என்று தெரிவித்தார்.
மேலும், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவினாலும், இந்தியக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, சர்வதேசச் சந்தையில் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. தட்டுப்பாட்டைப் போக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தியா ஒரு சில நாடுகளை மட்டுமே சார்ந்து இருக்காமல், தனது எரிசக்தி இறக்குமதியைப் பன்முகப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இன்று இந்தியா 41 நாடுகளிலிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கிறது. இதன் மூலம் ஒரு பிராந்தியத்தில் போர் ஏற்பட்டாலும், மற்ற நாடுகள் மூலம் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது,” என கூறினார். இந்தியாவிடம் 5.3 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மூலோபாய கையிருப்பு உள்ளது, மேலும் 6.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் கையிருப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
நமது அனைத்து உலகளாவிய கூட்டாளிகளுடனும் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஏற்கனவே பல கப்பல்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. நெருக்கடியான இத்தருணத்தில், நமது நாட்டின் தயார்நிலை சார்ந்த மற்றொரு அம்சம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எத்தனால் கலப்புப் பணிகள் நம்மை மேலும் வலுப்படுத்தி வருவதையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், தூதரகங்கள் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவிலும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளிலும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகளும், அவசர உதவி எண்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே எங்களுக்குத் தலையாய முன்னுரிமையாக இருந்து வருகிறது,” என்று கூறினார்.
“இந்த நெருக்கடி குறித்து இந்திய நாடாளுமன்றத்திலிருந்து உலகிற்கு ஒருமித்த மற்றும் ஒருங்கிணைந்த குரல் ஒலிப்பது மிகவும் அவசியமாகும். இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பலருடன், இரண்டு கட்டத் தொலைபேசி உரையாடல்கள் வாயிலாக நான் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முழுமையாக உறுதியளித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இக்காலகட்டத்தில் சிலர் உயிரிழந்தும், வேறு சிலர் காயமடைந்தும் உள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.”
நாட்டின் விவசாயிகளை நெருக்கடியிலிருந்து பாதுகாக்கப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஆறு யூரியா ஆலைகள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் போலவே, உர இறக்குமதியும் பல்வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தின் காரணமாக மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்றாலும், நிலக்கரி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
