காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தை மூத்தத் தலைவர் சசிதரூர் மீண்டும் புறக்கணித்திருப்பது, அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான சசிதரூர், அவ்வப்போது பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதனால் அவர் கட்சி மாறக்கூடும் என தகவல் நிலவி வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்பிக்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் உயர்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிதரூர் கலந்து கொள்ளவில்லை. இதேபோல், சார் விவகாரம் குறித்து விவாதிக்க முன்பு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இதற்கு தனது உடல்நிலை சரியில்லை என அவர் காரணமாக கூறியிருந்தார். அதேபோல், இந்த கூட்டத்தில் பங்கேற்காததற்கும் அவர் சில காரணங்களை கூறியுள்ளார். ஆனால் அவர் தெரிவித்த காரணங்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
