5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட, நாட்டில் அதிக முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலை தீர்க்க கடுமையாக போராடி வருகிறது.
ஒருபுறம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிடையே உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்து வருகிறது. அதாவது, ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரசீன் சக்கரவர்த்தி தமிழக அரசை விமர்சித்ததை தொடர்ந்து தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஒரு தரப்பினர் திமுக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் சைலண்ட்டாக பிரசீன் சக்கரவர்த்தி கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
மற்றொரு புறம் தமிழகத்தை போன்று சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அசாமிலும் இதே பிரச்சனை தலைத்தூக்கியுள்ளது. அந்தவகையில் தற்போது அசாம் மாநில காங்கிரஸி மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலத் தலைவருமான பூபேன் குமார் போரா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை மல்லிகார்ஜின கார்வுக்கும் ராகுல் காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன . இது தேசிய அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2021-25 வரை காங்கிரஸ் மாநிலத்தலைவராக இருந்த போரா, பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோயின் அடாவடித்தனம் தான் தனது முடிவுக்குக் காரணம் என்று போரா குற்றம் சாட்டியதாக அறியப்படுகிறது. தனது கடிதத்தில், கட்சித் தலைமையால் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், மாநிலப் பிரிவில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்றும் போரா கூறியுள்ளார். மாநிலத்தில் கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து உயர் தலைமைக்கு தெரிவித்ததாகவும், அந்தச் சூழ்நிலை தனது சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக போரா கூறுகையில், “இன்று காலை 8 மணிக்கு நான் என் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் உயர்மட்ட தலைமையிடம் அனுப்பி வைத்தேன். நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை விரிவாக விளக்கியுள்ளேன். இது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல. நான் 1994ஆம் ஆண்டு கட்சியில் இணைந்ததிலிருந்து 32 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்துள்ளேன். இது வெறும் தனிப்பட்ட கோட்பாடு அல்ல; கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவாகும். அதனால்தான் எல்லாவற்றையும் விரிவாக காங்கிரஸ் உயர்மட்ட தலைமையிடம் தெரிவித்தேன்.”
2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸின் தலைவராக போரா இருந்தார், கடந்த ஆண்டு அவருக்குப் பதிலாக கோகோய் நியமிக்கப்பட்டார். போரா அசாமில் இரு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். புதியதாக உருவாக்கப்பட்ட ரங்கனோடி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், எம்.பி. ராக்கிபுல் உசேன் அணியில் சேர்க்கப்பட்டதனால் அதிருப்தி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரா வரும் நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் முறையாக சேர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற உயர்மட்ட சேர்க்கை, எதிர்க்கட்சி முகாமில் இருந்து செல்வாக்கு மிக்க தலைவர்களை இழுப்பதன் மூலம் தனது நிலையை மேலும் பலப்படுத்த வகையில் பாஜகவின் நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
