குஜராத்தில் மாஞ்சா நூல் அறுத்ததில் 8 வயது சிறுவன் உட்பட இதுவரை 9 பேர்உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பட்டம் பறக்கவிடப் பயன்படும் மாஞ்சா நூலால், இதுவரை பல விபத்துகள் நடந்துள்ளன; உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.  எனினும், இதைப் பொருட்படுத்தாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தநிலையில், தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சா நூல் மூலம் இதுவரை குஜராத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் ஒரு தீயணைப்பு வீரரும், வதோதராவில் 33 வயது நபரும் காத்தாடி தொடர்பான விபத்துகளில் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

சூரத்தில், ஒரு தம்பதியினரும் அவர்களது மகளும் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சந்திரசேகர் ஆசாத் மேம்பாலத்தில் இருந்து சுமார் 60 அடி கீழே விழுந்தது. மேம்பாலத்தின் குறுக்கே தொங்கிக்கொண்டிருந்த மாஞ்சா நூலைத் தவிர்க்க முயன்றபோது, ​​34 வயதான ரெஹான் ஷேக் தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகவும், இதில் மூவரும் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக்கும் அவரது மகள் அலிஷா காதுனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு உயிரிழந்தனர். ஆரம்பத்தில் உயிர் பிழைத்த ஷேக்கின் மனைவி ரெஹானா பீபி, வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சூரத்தின் ஜஹாங்கிர்புராவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த 8 வயது ரியான்ஷ் போர்ஸ் என்பவரின் கழுத்தை ஒரு பட்டம் விடும் நூல் அறுத்துவிட்டதால், அவர் ரத்தப்போக்கால் உயிரிழந்தார். மற்றொரு இடத்தில், 23 வயது பிரின்ஸ் பாதம் என்பவரும் இதேபோன்ற முறையில் உயிரிழந்தார். அவர் மூன்று சகோதரர்களில் இளையவர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பரூச் மாவட்டத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 35 வயது ராகுல் பர்மாரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்துவிட்டதால் அவர் உயிரிழந்தார். ஆனந்த் மாவட்டத்தில், தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் டேங்கின் மீது அமர்ந்து பயணம் செய்த எட்டு வயது சிறுவன் ஒருவன், கழுத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்தான்.

அரவல்லி மாவட்டத்தில், 17 வயது தீர்த் படேல் என்ற சிறுவன் பட்டம் விடும் நூல் கழுத்தில் சிக்கியதால் உயிரிழந்தான். வடோதராவில், சங்கர் ரத்வா என்பவர் மின்கம்பியில் சிக்கிய தனது பட்டத்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பிவண்டியில், 50 வயதான தீயணைப்பு வீரர் நிதின் பாஷ்டே, உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மாஞ்சா நூலில் சிக்கியிருந்த ஒரு காகத்தை மீட்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version