கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ (Keralam) என மாற்றுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (பிப்ரவரி 24,) ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரதமர் அலுவலகக் கட்டிடமான ‘சேவா தீர்த்தில்’  நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவைச் செய்தியாளர்களிடம் அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே, மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார். மக்களின் இந்த நீண்ட நாள் விருப்பத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.

கேரள மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரி அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 24 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சில தொழில்நுட்ப மாற்றங்களைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மலையாள மொழியில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படுவதையே அதிகாரப்பூர்வமாக அனைத்து மொழிகளிலும், குறிப்பாக அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் மாற்றியமைக்க இந்த ஒப்புதல் வழிவகை செய்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version