திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டின் தரம் மற்றும் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில், திருமலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன பரிசோதனை கூடம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க இந்த அதிரடி முடிவை திருப்பதி தேவஸ்தானம்  எடுத்துள்ளது.

இந்த ஆய்வகத்தின் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள மாவு மில் வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில் இந்த இருதள ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தின் சிறப்பம்சமாக, நெய்யின் தரம் மற்றும் வாசனையைத் துல்லியமாகப் பரிசோதிக்கப் பிரான்ஸ் நாட்டிலிருந்து ‘E-Tongue’ (மின்னணு நாக்கு) மற்றும் ‘E-Nose’ (மின்னணு மூக்கு) ஆகிய கருவிகள் 3.5 கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட உள்ளன. மனிதர்கள் சுவை மற்றும் வாசனையை உணர்வதைப் போன்றே, ஆனால் மிகத் துல்லியமாகச் செயல்படும் இந்தக் கருவிகள், நெய்யில் சிறிதளவு கலப்படம் இருந்தாலும் அதை உடனடியாகக் கண்டுபிடித்துவிடும். மே மாதத்திற்குள் இந்தக் கருவிகள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வகத்தில் சுமார் 50 நவீனக் கருவிகள் கொண்டு 60 வகையான மூலப்பொருட்கள் (நெய், முந்திரி, ஏலக்காய், மிளகாய் தூள் போன்றவை) பரிசோதிக்கப்படும். பூச்சிக்கொல்லி மருந்துகள், கன உலோகங்கள் மற்றும் நுண்ணுயிர் பாதிப்புகள் என 200-க்கும் மேற்பட்ட சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் FSSAI அமைப்பு இதற்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலேயே ஒரு புனிதத் தலத்தில் இவ்வளவு வசதிகளுடன் கூடிய உணவு ஆய்வகம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version