ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோமுஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவிற்குச் சொந்தமான எரிவாயுவை ஏற்றி வரும் ‘சர்வ சக்தி’ (Sarva Shakti) என்ற கப்பல் பாதுகாப்பாக இந்தப் பாதையைக் கடந்துள்ள செய்தி இந்தியாவிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சுமார் 45,000 டன் சமையல் எரிவாயு (LPG) மற்றும் 18 இந்திய மாலுமிகளுடன் வரும் இந்தக் கப்பல், விசாகப்பட்டினம் துறைமுகத்தை நோக்கிப் பயணிக்கிறது.
பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இப்பகுதியில் கப்பல்கள் செல்வது கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறைந்தது. இந்த நிலையில், ஈரானின் லாரக் தீவுக்கு அருகாமையில், டெஹ்ரான் வகுத்த பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி இந்தக் கப்பல் பயணித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) இந்தக் கப்பலில் உள்ள எரிவாயுவை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, கப்பலில் இந்திய மாலுமிகள் இருப்பதை உணர்த்தும் வகையில் சர்வதேச சிக்னல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
உலகிலேயே சமையல் எரிவாயுவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எரிவாயு வரத்து குறைந்ததால், இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைச் சமாளிக்க மத்திய அரசு ஒருபுறம் ஈரானுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி 8 கப்பல்களைத் திசைதிருப்பியுள்ளது. மறுபுறம், உள்நாட்டு உற்பத்தியை நாளொன்றுக்கு 54,000 டன்களாக (60%) அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஹோமுஸ் நீரிணையைக் கடப்பது தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்னணு குறுக்கீடுகள் காரணமாக கப்பல்களின் இருப்பிடம் தவறாகக் காட்டப்படுவதால், பல கப்பல்கள் தங்களது ஜிபிஎஸ் கருவிகளை (Transponders) அணைத்து வைத்தே பயணிக்கின்றன. இதற்கு முன்பாக ‘தேஷ் கரிமா’ என்ற இந்தியக் கப்பல் இதுபோன்று தப்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘சர்வ சக்தி’ கப்பல் பாதுகாப்பாகக் கடந்துள்ளதால், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியத் துறைமுகங்களில் இந்த எரிவாயுவை விரைவாக இறக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
