ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே மூண்டுள்ள போரினால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 18) ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை குறித்தும் விரிவாக விவாதித்தனர். குறிப்பாக, அமீரகத்தின் சிவிலியன் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு முன்கூட்டியே ஈத் (Eid) பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் இலக்குகள் மீதான தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. அப்பாவி உயிர்களின் இழப்பையும், உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மத்திய கிழக்கில் விரைவில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து செயல்படும் என்று அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிக்கும், அங்கு வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் பாதுகாப்புக்கும் வளைகுடா பிராந்தியம் மிகவும் முக்கியமானது. 2022-ல் கையெழுத்திடப்பட்ட விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கு (CEPA) பிறகு, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version