அதிகரித்து வரும் வெப்பநிலை உடல் உழைப்பின்மையை அதிகரிக்கும். இது 2050-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 470,000 முதல் 700,000 இறப்புகளுக்கு வழிவகுத்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேராபத்து குறித்து ஒரு புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை 2050-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான கூடுதல் மரணங்களுக்கு வழிவகுக்கும் என்று அர்ஜென்டினாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கணக்கிட்டுள்ளனர்.
வெப்பம் மக்களின் உடல் செயல்பாட்டுத் திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 156 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். அவர்களின் முடிவுகள் ‘ தி லான்செட் குளோபல் ஹெல்த்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன . அதிக வெப்பநிலை உடற்பயிற்சியை மிகவும் கடினமாக்குவதாகவும், இதனால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் அகால மரணத்திற்கான அபாயம் அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கை காட்டுகிறது.
ஆய்வின்படி, ஒவ்வொரு மாதமும் சராசரி வெப்பநிலை 27.8°C-க்கு மேல் உயரும்போது, உலகளவில் உடல் உழைப்பின்மை சுமார் 1.5 சதவீதம் அதிகரிக்கக்கூடும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு உடல் உழைப்பின்மை சுமார் 1.85 சதவீதம் அதிகரிக்கக்கூடும். மத்திய அமெரிக்கா, சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற மிகவும் வெப்பமான சில பிராந்தியங்களில், இந்த அதிகரிப்பு நான்கு சதவீதம் வரை எட்டக்கூடும்.
உடல் செயல்பாடுகளில் ஏற்படும் இந்தக் குறைவு, தனிப்பட்ட வாழ்க்கை முறை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அதிகப்படியான வெப்பம் உடலுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் எந்தவொரு அசைவும் சோர்வாகத் தோன்றுவதோடு, இதயத்தின் மீதான அழுத்தத்தையும் அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக, மக்கள் உடற்பயிற்சியைத் தவிர்க்கின்றனர், இது இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
இந்த அதிகரித்த செயலற்ற தன்மையானது, நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் ஒவ்வொரு ஆண்டும் 470,000 முதல் 700,000 வரையிலான கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அந்த ஆய்வு மதிப்பிடுகிறது. மேலும், இது பில்லியன் கணக்கான டாலர் உற்பத்தி இழப்புக்கும் வழிவகுக்கலாம்.
இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். வெப்பத்தைக் குறைப்பதற்காக நகரங்களை மறுவடிவமைத்தல், உடற்பயிற்சிக்காகக் காலநிலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குதல், மற்றும் வெப்பத்தின் அபாயங்கள் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை அவர்கள் பரிந்துரைக்கின்றனர். வெப்பமயமாகும் இந்த உலகில் ஆரோக்கியமாக இருப்பதற்கு, சுறுசுறுப்பாக இருப்பது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது என்று ஆய்வின் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்

