கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து, தற்போது நாட்டின் தலைநகரான டெல்லியின் பெயரை ‘இந்திரப்பிரஸ்தம்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக எம்.பி பிரவீன் கண்டேல்வால் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சூழலில், மகாபாரத காலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை டெல்லியின் பெயர் எப்படியெல்லாம் மாறியது என்பதைப் பார்ப்போம்.
டெல்லியின் வரலாறு புராண காலத்திலிருந்தே தொடங்குகிறது. மகாபாரதத்தின்படி, பாண்டவர்கள் காண்டவப் பிரஸ்தம் என்ற காட்டை அழித்து ‘இந்திரப்பிரஸ்தம்’ என்ற நகரத்தை உருவாக்கித் தங்களது தலைநகராகக் கொண்டனர். இன்றைய டெல்லியின் சில பகுதிகள் அந்தப் புராண கால இந்திரப்பிரஸ்தத்துடன் தொடர்புடையவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கி.பி 8-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட தோமரா வம்ச மன்னர்கள், இதற்கு ‘தில்லிகா’ அல்லது ‘தில்லி’ என்று பெயரிட்டனர். பின்னர் சவுகான் மன்னர்களின் காலத்திலும் இதே பெயர் புழக்கத்தில் இருந்தது. இதுவே காலப்போக்கில் மருவி ‘டெல்லி’ (Delhi) என்று மாறியது.
டெல்லி சுல்தான்களின் ஆட்சியில் இந்நகரம் விரிவடைந்தது. துக்ளக் வம்சத்தினர் ‘துக்ளகாபாத்’ என்ற பகுதியை உருவாக்கினர். 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜகான், இன்றைய பழைய டெல்லி பகுதியைத் தனது பெயரால் ‘ஷாஜகானாபாத்’ என்று அழைத்தார். செங்கோட்டை மற்றும் ஜமா மஸ்ஜித் ஆகியவை இந்தக் காலத்தில்தான் கட்டப்பட்டன.
1911-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்ற முடிவு செய்தது. அப்போது புதிய நிர்வாகத் தலைநகராக ‘புதுடெல்லி’ (New Delhi) உருவாக்கப்பட்டது. 1931-ஆம் ஆண்டு புதுடெல்லி அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
வரலாற்று ரீதியாக டெல்லி சுமார் 7 முதல் 11 முறை பல்வேறு பெயர்களில் மாற்றி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திரப்பிரஸ்தம், தில்லிகா, தக்ளி, துக்ளகாபாத், ஷாஜகானாபாத் எனப் பல பெயர்களைக் கடந்த பின்னரே, இன்று ‘டெல்லி’ என்ற பெயர் நிலைபெற்றுள்ளது. இந்தநிலையில் மீண்டும் டெல்லியின் பெயரை மாற்ற கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
