வியட்நாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குவாங் நாம் மற்றும் மத்திய நகரமான ஹியூவில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இது, அந்நாட்டில் இதுவரை பதிவான மழைப் பொழிவுகளிலேயே அதிகபட்சமானது என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் 6 மாகாணங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை பேரைத் தேடும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர், பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 3 நாட்களாக, பல பகுதிகளில் மழைப் பொழிவு 150 சென்டி மீட்டரைத் தாண்டியுள்ளதாக வியட்நாம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
