அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுட முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெள்ளை மாளிகையின் 17-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கு அருகே சனிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். திடீரென அவர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சுடத் தொடங்கினார். இதனால் பதற்றமடைந்த அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தற்காப்புக்காகப் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் அந்த நபருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டநிலையில், தாக்குதல் நடத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் 21 வயதான நாசீர் பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதமே வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது 15 முதல் 30 ரவுண்டுகள் வரை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தாக்குதல் நடத்தியவரின் குண்டு பட்டு காயமடைந்தாரா அல்லது பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலில் காயமடைந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலேயே இருந்தார். எனினும், அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது. அங்குள்ள செய்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முடக்க நிலை நீக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ மற்றும் ரகசிய பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
