யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால், மேற்காசிய நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த போர்ச் சூழலைத் தணிக்கும் வகையில், 60 நாள் கால அளவிலான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அமைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றவும், எவ்விதக் கட்டணமும் இன்றி கப்பல்கள் தடையின்றிச் செல்ல அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, ஈரான் மீதான துறைமுகத் தடைகளை நீக்கவும், அந்த நாடு தனது எண்ணெயைத் தடையின்றி விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.
போர் நிறுத்தக் காலமான 60 நாட்களில், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாகக் கையெழுத்தாகவில்லை என்பதால், இறுதி கட்டத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையில் நேர்மையாகச் செயல்படத் தவறினால், இந்த 60 நாள் காலக்கெடு முடிவதற்கு முன்பே போர் நிறுத்தம் ரத்தாகக்கூடும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
