பாகிஸ்தானில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவட்டா நகரில், பயணிகள் ரயில் ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்தத் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்த பயங்கர சத்தத்தில் ரயிலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே 24 பயணிகள் உடல்கள் சிதறி பலியாகினர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட அமைப்பான ‘பலுசிஸ்தான் விடுதலைப் படை’ (BLA) என்ற கிளர்ச்சிப் படை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும், பலுசிஸ்தான் தனிநாடு கோரியும் இந்த அமைப்பினர் தொடர்ந்து இது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
