ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா நகரில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பெயினில் கோர்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயில் அடாமுஸ் அருகில் சென்ற போது திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த தடம் புரண்ட ரயில் மற்றொரு தண்டவாளத்தில் மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசு ரயில் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் பயணிகள், ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து, ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, பயணிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 73 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய ஃப்ரீசியா என்ற ரயில் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகும்.
