ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் தரப்பு தற்போது அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், ஈரானின் இந்த கோரிக்கை “சற்று தாமதமானது” என்று குறிப்பிட்ட அவர், “தற்போது அவர்களை விட நாங்களே (அமெரிக்கா) போரிட அதிக ஆர்வமாக உள்ளோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் “அற்புதமான” இஸ்ரேலியப் படைகளுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்   கட்டமைப்புகளை “ஒவ்வொரு மணி நேரமும்” அழித்து வருவதாகத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்டர் மியாமி கால்பந்து அணியினருடன் (Inter Miami soccer team) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஈரான் தற்போது அமெரிக்காவைத் தொடர்புகொண்டு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். “அவர்கள் எங்களை அழைத்து, எப்படி ஒரு ஒப்பந்தம் செய்வது என்று கேட்கிறார்கள். ஆனால், நான் அவர்களிடம் ‘நீங்கள் வருவதற்குச் சற்று தாமதமாகிவிட்டது’ என்று கூறிவிட்டேன். இப்போது அவர்களை விடவும் போரிடுவதில் நாங்களே அதிக ஆர்வமாக உள்ளோம்,” என்று ட்ரம்ப் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை போரில் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்துள்ளதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “ஈரானுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அவர்களின் 24 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டு, கடற்படை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களின் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதால், தற்போது அவர்களிடம் விமானப்படை என்ற ஒன்றே இல்லை. ஈரானின் தகவல் தொடர்பு வசதிகள், ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் முறையே 60% மற்றும் 64% வரை நிர்மூலமாக்கப்பட்டுள்ளன,” என்று அவர் பட்டியலிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் ராணுவத்திற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறு உத்தரவிட்டுள்ளார். “ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), ராணுவம் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆயுதங்களைக் கைவிடுமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் நீங்கள் கொல்லப்படுவது உறுதி. இதுவே ஈரானிய மக்களுக்காக எழுந்து நின்று, உங்கள் நாட்டை மீட்டெடுக்க உதவும் சரியான தருணம்,” என்று அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சரண் அடைய முன்வருபவர்களுக்கு ‘பாதுகாப்பு மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் ட்ரம்ப் சலுகை வழங்கியுள்ளார். “எங்களுடன் ஒத்துழைத்து சரண் அடைபவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வோம். இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில் மரணம் நிச்சயம் என்பதை உறுதிப்படக் கூறுகிறேன்,” என மிகக் கடுமையான தொனியில் அவர் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version