பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை (Followers) பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். தனது இஸ்ரேல் பயணத்தின் போது அவர் இந்த மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளார்.

உலக அளவில் டிஜிட்டல் தளத்தில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். மற்ற உலகத் தலைவர்களுக்கும் இவருக்கும் இடையேயான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இரண்டு மடங்கு அதிகம் ,

பிரதமர் நரேந்திர மோடி 10 கோடி (100 மில்லியன்)  பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  4.32 கோடி (43.2 மில்லியன்) என இரண்டாம் இடத்திலும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 1.5 கோடி (15 மில்லியன்) என மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

உலக அளவிலான டாப் 5 அரசியல் தலைவர்களின் மொத்த பின்தொடர்பவர்களைக் கூட்டினால் கூட, அது பிரதமர் மோடியின் 10 கோடி என்ற எண்ணிக்கையை விடக் குறைவு என்பதே இந்தச் சாதனையின் முக்கியப்பம்சமாகும்.

இந்திய அளவிலும் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக உள்ள தலைவர்கள் பல மடங்கு பின்தங்கியே உள்ளனர். அந்தவகையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 1.61 கோடி (16.1 மில்லியன்) பின்தொடர்பவர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 1.26 கோடி (12.6 மில்லியன்) பின்தொடர்பவர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

பிரதமர் மோடி முதன்முதலாக பிரதமராகப் பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். கடந்த பத்தாண்டுகளில், இளைஞர்கள் மற்றும் உலக மக்களிடையே அவருக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து, இன்று இந்தச் சாதனையை எட்டியுள்ளது. அரசியல் களத்தில் மட்டுமின்றி, டிஜிட்டல் உலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை பிரதமர் மோடி இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version